மோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர்.. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு
பிரதமர் மோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மணிசங்கர் அய்யர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மணிசங்கர் ஐயர் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸுக்கு ஆதரவாக குஜராத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, மணிசங்கர் ஐயர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சு, இன ரீதியான பிரச்சனையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரதமர் மோடியை மணிசங்கர் ஐயர் இவ்வாறு விமர்சித்தது காங்கிரஸ் பாரம்பரியத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மணிசங்கர் ஐயரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலயில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் அசோக் ஜெலாட் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயரை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் மணிசங்கர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரம் கூறுகையில், மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், சிறந்த பேச்சாளர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை திறமையாக கையாளக் கூடிய, அனுபவமும், திறமையும் உடையவர். பத்திரிகைகளில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுபவரும்கூட. விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ளதால், காங்கிரஸுக்கு கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில், மணிசங்கர் ஐயர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்று தெரிவித்தனர்.