தேர்தல் வந்தால் மட்டுமே காங்கிரசுக்கு ஏழைகள் மீது அக்கறை வரும்: மோடி
கோரக்பூர்: தேர்தல் வந்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் மீது அக்கறை வரும் என்று பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம், கோராக்பூரில் நடந்த பா.ஜ.க பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது,''நாடு முழுவதும் பா.ஜ.க. அலை வீசுகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகப்போகிறது. இதற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களே சாட்சியாக உள்ளது. காங்கிரசின் தவறான கொள்கையால் நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் ஏழைகள் அதிகாரத்திற்கு வருவதை ஏற்று கொள்ளாது. ஆனால், தற்போது ஏழைகள் குறித்து பேசி வருகிறது. தேர்தல் வந்தால் மட்டுமே ஏழைகள் குறித்து காங்கிரசுக்கு ஞாபகம் வரும். ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து டீ விற்ற ஒருவன் தலைவராக வருவதை காங்கிரசால் ஏற்று கொள்ள முடியவில்லை.
குஜராத் பெரும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாகியுள்ளது. இங்கு அனைவரும் 24 மணி நேரமும் மின்சாரம் பெற்று வருகின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக மோதல்கள் எதுவும் இல்லை. உ.பி.யில் விவசாயத்திற்கு தேவையான உரங்களை கள்ளச்சந்தையில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. குஜராத்தை போல உ.பி.யை உருவாக்க சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் தவறி விட்டது'', என இவ்வாறு அவர் பேசினார்.