மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை தடை செய்ய முடியாது.. காங்.குக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
டெல்லி: பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிகாரித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அகில இந்திய வானொலியில் மாதம் இருமுறை ‘மன் கி பாத்' ( மனதில் உள்ளதைப் பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சி நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மக்களிடம் எல்லாம் சென்றடைவதால், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதனால் பீகார் தேர்தல் முடியும் வரை பிரதமர் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பேச தடை விதிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் தேர்தல் கமிஷனிடம் வலியுறுத்தியது.
இந்த நிகழ்ச்சியின் மூலம், நியாயமற்ற முறையில் தனது ஆட்சியின் சாதனைகள் அல்லது வாக்குறுதிகள் மூலம் பீகார் வாக்காளர்களை கவர முடியும் என காங்கிரஸ் விளக்கமளித்தது.
ஆனால், காங்கிரஸின் இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், மன் கி பாத் நிகழ்ச்சியில் பீகார் தேர்தலை குறிவைத்து பேசப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியதாக கூறப்படுகிறது.