காங்கிரஸ் தயவில் ஆட்சி நடத்திய திமுக நன்றி மறந்தது..: ஜெய்ராம் ரமேஷ்
ஹைதராபாத்: காங்கிரஸ் தயவில் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்திய திமுக, 10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. நன்றி மறந்து நடந்துகொண்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியால் திமுக எவ்வளவோ ஆதாயங்களைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் தயவின்றி திமுகவால் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்க முடியாது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தேவையான பதவிகளை பெற்றுக்கொண்டதுடன், தன் விருப்பம் போல் திமுக நடந்துகொண்டது.
டி.ஆர்.பாலு அமைச்சரானது…
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின்போது தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக திமுகவின் டி.ஆர். பாலு இருந்தது மிக மோசமான காலக்கட்டம்.
ஆ.ராஜா அமைச்சரானபோது...
அதன்பிறகு அவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், ஆ. ராஜா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தபோது என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
திமுகவிற்கு ஆதாயம்
காங்கிரஸ் மூலம் அடைந்த ஆதாயங்களை திமுக கொஞ்சம் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்.
நன்றி மறந்த திமுக
திமுக தலைவர் கருணாநிதி மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்துள்ள மதிப்பையும், மரியாதையையும் வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸிடம் திமுக நடந்துகொண்ட விதம் மிகவும் துரதிருஷ்டவசமானது.
காங்கிரசுக்கு பின்னடைவு
பின்னடைவு உண்மைதான்: காங்கிரஸ் கட்சியை ஊழல்வாதக் கட்சியாக முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரசாரத்தை, போதிய தீவிரத்துடன் எதிர்கொள்ள காங்கிரஸ் தவறிவிட்டது. 2ஜி, காமன்வெல்த் போன்ற ஊழல் புகார்களால் காங்கிரஸூக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மையே என்றார் ஜெய்ராம் ரமேஷ்.