இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தியது நேருவின் சாதனை: சோனியா பாராட்டு
டெல்லி: நாட்டின் முதலாவது பிரதமர் நேருவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு நேரு பிறந்தநாள் விழாக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த எவருமே இடம்பெறவில்லை. இதன் காரணமாக நேரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் 2 நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறும் இம் மாநாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெறாத அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இடதுசாரிகள், மதசார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, திரிணாமுல், அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதீஷ் குமார் ஆகியோருக்கு சோனியாகாந்தி தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த மாநாடு மூலம் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாள்களில் கட்சி மாநாடு இருப்பதால் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், கானாவின் மூத்த அரசியல் தலைவர் ஜான், நேபாள முன்னாள் பிரதமர் மாதவ் கே நேபாள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆஸ்மா ஜஹாங்கீர், தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட தலைவர் அகமது கத்ராடா மற்றும் ரஷ்யா, சீனா, வியட்நாம், வங்க தேசம் உள்பட 54 நாடுகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மாநாடு இன்று பிற்பகல் தொடங்கியது. துவக்க விழாவில் ஹமீது கர்சாய், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மகாதேவ் கே.நேபாள், பூட்டான் நாட்டின் ராணி மாஜஸ்டி டோர்ஜி வான்ங்மோ போன்றோர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா ஆகியோரும் பங்கேற்றனர்.
துவக்க உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி "நேரு பிரதமரான போது இந்தியா அப்போதுதான் சுதந்திரம் பெற்று உருவாகியிருந்த புதிய நாடாக இருந்தது. அந்த கஷ்டமான சூழ்நிலையிலும், மக்கள் மத்தியில் இந்தியா மீது நம்பிக்கையை உருவாக்குவதில் நேரு வெற்றியை பெற்றார். சரியான வழியில் சென்று தோற்பது, தவறான வழியில் சென்று வெற்றி பெறுவதை விட மேலானது என்று நேரு கூறுவார். இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றியதுதான் நேருவின் மிகப்பெரிய வெற்றி" என்றார்.