குடியரசு தின விழாவில், அமித்ஷாவுக்கு முதல் வரிசை, ராகுலுக்கு நான்காவது வரிசை சீட்! காங். கோபம்
குடியரசு தினவிழாவை காண காங்கிரஸ் தலைவருக்கு நான்காவது வரிசை சீட் ஒதுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
டெல்லி: குடியரசுதின விழாவை காண முக்கிய பிரமுகர்கள் அமரும் இடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில், தென் கிழக்காசிய கூட்டமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். உள்நாட்டு பிரமுகர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளும், இதில் பங்கேற்று குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டுகளித்து வருகின்றனர்.
முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக பிரதான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், மூன்று ஆண்டுகளாக, சோனியா காந்திக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு இந்தாண்டு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கீழ்த்தரமான அரசியலை பாஜக கையாள்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே ராகுலுக்கு இவ்வாறு நான்காவது வரிசையில் சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுக்கு, முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், ராகுலுக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரை மேலும் கோபமடைய செய்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு இந்த வருடம் முதன்முறையாக 10 ஆசிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்வதால், அவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.