தேசிய விவகாரங்களில் மோடிக்கு நோய் மனநிலை உள்ளது.. காங்கிரஸ் கடுமையான தாக்கு
பொய்களைப் பரப்புபவர் பிரதமர் மோடி என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை முஸ்லிம்களின் கட்சி என்று கூறியிருப்பது நோய் மனநிலை என்றும் மோடி பொய்களைப் பரப்புபவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று முன் தினம் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மோடியின் இந்த பேச்சு காங்கிரஸ்காரர்களிடையே கோபத்தை உருவாக்கியுள்ளது.
பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கடுமையாக பதிலளித்துள்ளார்.
ஆனந்த் சர்மா ஊடகங்களிடம் கூறியதாவது, பிரதமர் மோடியின் பேச்சு, மக்களைப் பிரிப்பதற்கான முயற்சி. காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடுகிறது. அதற்காக தேசிய அளவில் ஒரு இயக்கமாக மேற்கொள்கிறது. அதனால்தான் மோடி காங்கிரஸ் கட்சியை எதிர்க்கிறார்.
காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் கட்சி என்று அழைப்பது ஒரு பிரதமருக்கு அழகல்ல. தேசிய விவகாரங்களில் அவரது நோய் மனநிலையே வெளிப்படுகிறது. பிரதமர் மோடி வரலாறு பற்றியும் வரலாற்று உண்மை பற்றியும் தவறாக பேசி வருகிறார். பொய்களைப் பரப்பி வருகிறார். பொய்களையும் அரை உண்மைகளையும் பேசி வருகிறார்.
பிரதமர் மோடிக்கு குறைவான வரலாற்று அறிவே இருக்கிறது. அவருடைய சொந்த வரலாற்றை எழுதுகிறார். காங்கிரஸின் தலைவர்கள் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், லாலா லஜபதி ராய், மௌலானா அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் மிகப்பெரிய தலைவர்கள் என்பதை பிரதமர் மோடி மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.