அஸ்ஸாமில் நெருக்கடி முற்றுகிறது.. இன்று பதவி விலகுகிறார் முதல்வர் கோகாய்
குவஹாத்தி: அஸ்ஸாமில் காங்கிரஸ் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் தருண் கோகாய்க்கு நெருக்கடி முற்றியுள்ளது. இன்று அவர் தனது பதவியை விட்டு விலகவுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கோட்டை போல திகழும் அஸ்ஸாமிலும் காங்கிரஸுக்கு பலத்த அடி கிடைத்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று பாதிக்கும் மேற்பட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் முதல்வர் பதவியிலிருந்து விலக கோகாய் முடிவு செய்துள்ளார். இன்று அவர் பதவி விலகுவார் என்று தெரிகிறது.
2001 முதல் ஆட்சியில் இருந்து வருகிறது காங்கிரஸ். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 14 எம்.பி தொகுதிகளில் 3ல் மட்டுமே அக்கட்சி வென்றுள்ளது. இது வரலாறு காணாத தோல்வியாகும்.
கட்சிக்கு பெரும் தோல்வி கிடைக்க உள்கட்சிப் பூசல்தான் காரணம் என்கிறார்கள். அதேசமயம், பாஜக இங்கு 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது கோகாய் தலைமையில் சந்தித்த இந்த தோல்வியைத் தொடர்ந்து அவரது எதிர்ப்பாளர்களுக்கு கையில் கொடுத்த லட்டை எடுத்து வாயில் வைத்து ஊட்டி விட்டது போலாகி விட்டது. இதனால் கோகாய்க்கு எதிராக முன்பை விட உரத்த குரலில் எதிர்ப்பைக் கிளப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், அதிருப்தியாளர்களின் தலைவராக கருதப்படுபவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், 78 எம்.எல்.ஏக்களில் 45 பேர் கூடி தேர்தல் தோல்வி குறித்து விவாதித்தோம். இதுதொடர்பாக உண்மை நிலையை விவரித்து கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் சரியான நடவடிக்கையை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
இதற்கிடையே, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கோகாய் கொடுக்கவுள்ளார். ஆனால் அதை கட்சித் தலைமை ஏற்குமா என்பது சந்தேகமாக உள்ளது. மாறாக எதிர்ப்பாளர்களை அழைத்து கட்சித் தலைமை சமாதானப்படுத்தலாம் என்று தெரிகிறது.