காங்கிரஸ் கட்சி 6 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது.. கர்நாடக பிரசாரத்தில் மோடி விளாசல்
குற்றம், ஊழல், சாதியம், மதவாதம் நிறைந்தது காங்கிரஸ் கட்சி என்று கர்நாடகா பிரசாரத்தில் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோலார் : குற்றம், ஊழல், சாதியம், மதவாதம், முறையற்ற ஒப்பந்தங்கள், மோசமான கட்சி பண்பாடு ஆகிய 6 விதமான நோய்களால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கடைசி கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோலார் அருகே உள்ள பங்காருபேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கர்நாடகாவின் பெருமை சீரழிக்கப்பட்டு விட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், குற்றம், ஊழல், சாதியம், மதவாதம், முறையற்ற ஒப்பந்தங்கள், மோசமான கட்சி பண்பாடு ஆகிய 6 விதமான நோய்களால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இவை அனைத்தும் கர்நாடகாவின் வளர்ச்சியையும் பாதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பிரதமராக தான் பதவி ஏற்கப்போவதாக ராகுல்காந்தி பேசி வருவது அகந்தையின் வெளிப்பாடு என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என்றைக்குமே கட்சியின் பிற தலைவர்களையோ, கூட்டணிக் கட்சி தலைவர்களையோ மதித்தது இல்லை என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இனியும் கர்நாடகத்தை காப்பாற்ற வேண்டுமானால் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.