சுஷ்மாவுக்கு எதிராக காங்.ன் தீர்மானத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர்களே ஆப்சென்ட்... தீர்மானம் தோல்வி
டெல்லி : மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர்களே இல்லை.
லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சுஷ்மா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், விதிகளை மீறி தான் எந்த தவறையும் செய்யவில்லை என்றார். ஆனால், சுஷ்மாவின் விளக்கத்தை ஏற்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே கூறும் குற்றச்சாட்டுகளை அரசு முற்றிலும் நிராகரிப்பதாகவும், லலித் மோடிக்கு எதிராக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ப்ளூ கார்னர் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியதாகவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சுஷ்மா பதவி விலக மாட்டார் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிய நிலையில், காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு எதிராக அதிக வாக்குகள் பதிவானதால் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.