கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்.. கவர்னருடன் சந்திப்பு!
Recommended Video
பானஜி: கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி அம்மாநில ஆளுநரை காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து இருக்கிறார்கள். 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளனர்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். தொடர்ந்து அலுவலக பணிகளை செய்து வந்த அவர் நேற்று உடலநலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பாஜக கஷ்டம்
கோவாவில் நீண்ட நாட்களாக பாஜக கஷ்டப்பட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. அங்கு பாஜக ஆட்சி எப்போதும் வேண்டுமானாலும் கவிழும் என்ற நிலை இருந்தது. தற்போது மனோகர் பாரிக்கரின் மறைவால் அந்த பிரச்சனை பெரியதாகி உள்ளது.
எத்தனை இடங்கள்
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை இடங்கள் உள்ளது. அதில் மனோகர் பாரிக்கரின் மறைவை அடுத்து மொத்தமாக 4 இடங்கள் காலியாக உள்ளது. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சி 14 இடங்களை கொண்டுள்ளது. கோவா மாநில கட்சிகளான மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி 3 இடங்களையும், கோவா பார்வேர்ட் கட்சி 3 இடங்களையும், சுயேட்சைகள் மூன்று இடங்களை கொண்டு இருக்கிறார்கள்.
எப்படி ஆட்சி
மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவுடன் 21 இடங்கள் பெரும்பான்மை பெற்று அங்கு பாஜக ஆட்சி செய்து வந்தது. ஆனால் மனோகர் பாரிக்கர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு பாஜகவிற்கு ஆதரவு வழங்கப்பட்டது. இப்போது பாரிக்கரின் மறைவு காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் உரிமை
கோவாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி அம்மாநில ஆளுநரை சந்தித்து இருக்கிறது. கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவை கோவா காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தித்து கடிதம் அளித்து இருக்கிறார்கள். மனோகர் பாரிக்கரின் மறைவால் கூட்டணி கட்சிகள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அதனால் ஆட்சியை கலைக்க வேண்டும், காங்கிரசை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் காங்கிரஸ் கூறியுள்ளது.