களை கட்டுகிறது கர்நாடக சட்டசபை தேர்தல்.. தேர்தல் யாத்திரையை தொடங்கினார் முதல்வர் சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநில முதல்வர் சித்தராமையா, மாநிலம் தழுவிய பிரசார யாத்திரையை தொடங்கியுள்ளார். பாஜகவின் வாக்கு வங்கியாக பார்க்கப்படும், லிங்காயத்து பிரிவினரின் முக்கிய இடமான பசவகல்யாணில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் சித்தாரமையா.
2018ம் ஆண்டு, மே மாத வாக்கில், கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைப்பதிலும், பாஜக ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் போட்டி போட்டு வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் பிரச்சார யாத்திரையை தொடங்கி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறார்.
பாஜகவிற்கு பலம் லிங்காயத்து ஜாதியினரின் வாக்குகள். இந்த ஜாதி பிரிவினர்தான் கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் இந்த ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க காரணம்.
இதை கருத்தில் கொண்டு லிங்காயத்து பிரிவினரின் புனித பூமி என கருதப்படும், பீதர் மாவட்டத்திலுள்ள, பசவகல்யாண் நகரில் தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார் சித்தராமையா.
My appeal to the citizens of Karnataka:
— Siddaramaiah (@siddaramaiah) December 14, 2017
As divisive forces attempt to disrupt our social harmony, let us come together to safeguard the very idea of Karnataka. The Govt & the people of the state will not tolerate any attempt to tamper with our secular, inclusive heritage. pic.twitter.com/POgFGiUxF9
காங்கிரசின் வழக்கமான சிறுபான்மையினர், தலித் வாக்கு வங்கியை தாண்டி லிங்காயத்து பிரிவினர் வாக்குகளையும் ஈர்ப்பதே முதல்வரின் நோக்கம் என்கிறார்கள்.
சித்தாரமையா டிவிட்டரிலும் மிகவும் ஆக்டிவாக உள்ளார். உடனுக்குடன் அவரது பேச்சு மற்றும் பிரச்சார விவரங்களை படங்களோடு பதிவேற்றி வருகிறது முதல்வரின், ஐடி விங்.