வெளிநாட்டு தலைவர்களை அழைக்கும் பிரதமரின் முடிவில் குறுக்கிடக் கூடாது: பாஜகவுக்கு காங். ஆதரவு
டெல்லி: தமது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது பிரதமரின் முடிவு.. அதில் நாம் குறுக்கிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
நாட்டின் பிரதமராக வரும் 26-ந் தேதி நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இப்பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்ள தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஜெயலலிதாவும் இதில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக்சிங்வி, எந்த ஒரு தலைவரையும் வரவேற்பது என்பது இங்கு பிரச்சனை இல்லை. வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது பிரதமரின் முடிவு. அதில் நாம் குறுக்கிட்டுக் கொண்டிருக்க கூடாது. அது அரசின் நடவடிக்கைகளில் ஒன்று என்றார்.