கதரை உதறி விட்டு 15ம் தேதி முதல் காவி அணிகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா!
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம் கிருஷ்ணா வருகிற 15ம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம் கிருஷ்ணா வருகிற 15ம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்திரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்று கடந்த 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தல் குறித்து பாஜகவின் பார்வை திரம்பியுள்ளது.
மற்ற கட்சி தலைவர்களுக்கு வலை
கர்நாடகாவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே பாஜக மற்ற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை தன் வசம் இழுக்க முயற்சி செய்து வருகிறது.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
எஸ். எம் கிருஷ்ணாவுடன் எடியூரப்பா பேச்சு
மூத்த தலைவர் எஸ். எம் கிருஷ்ணாவிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் எடியூரப்பா. மேலும் பாஜகவில் இணைந்தால் துணை குடியரசு தலைவர் பதவி, ஆளுநர் உள்ளிட்ட பதவிகள் என பல சலுகைகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஆபர்கள் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரசில் அதிருப்தி அடைந்த கிருஷ்ணா
காங்கிரசில் சில காலமாக அதிருப்தியில் இருந்து வந்த எஸ். எம். கிருஷ்ணாவும், பாஜக பககம் திரும்பினார். கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். அவரை சமாதானப்படுத்த முயறசிகள் நடந்தன. ஆனால் கிருஷ்ணா இறங்கி வரவில்லை.
மாண்டியா - மைசூரு மாவட்டம்
திட்டமிட்டபடி கிருஷ்ணா பாஜகவில் சேருகிறார். 15ம் தேதி அவர் முறைப்படி இணையவுள்ளார். கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. பாஜகவில் இணைந்தால், மாண்டியா மற்றும் மைசூரைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதிகள் முழுவதும் பாஜகவின் வசமாக மாறும் வாய்ப்புள்ளது.
அமித் ஷா தலைமையில்
எஸ்.எம் கிருஷ்ணா வருகிற 15ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் வருகிற 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெறும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.