ஆம் ஆத்மியின் சாயம் வெளுக்கப் போவது உறுதி – சொல்கிறார் சுப்ரமணிய சாமி!
டெல்லி: டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சாயம் வெளுத்துவிடும் என்று தெரிவித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவாலின் உண்மை முகம் விரைவில் வெளிவந்து விடும்.
காங்கிரஸ் கட்சி இனி எழுந்திருக்கவே முடியாது. அக்கட்சியின் வாக்குகள் மட்டுமே ஆம் ஆத்மிக்கு சென்றடைந்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதைத்தான் காட்டுகின்றன.
எனவே பாஜகவுக்கு போட்டி என்பதே இல்லை. ஏனெனில், ஆம் ஆத்மியால் டெல்லியைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவாலின் சாயம் வெளுத்துவிடும்.
காஷ்மீர் தொடர்பான பாஜகவின் கொள்கைகளில் மாற்றம் ஏதுமில்லை. ராமர் கோவில் கட்டப்படும். காஷ்மீரி பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்படுவர்.
370 சட்டவிதி நீக்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இவையெல்லாம் இன்னும் 5 ஆண்டுகளில் செய்யப்படும்." என்று தெரிவித்துள்ளார்.