ராணுவ பலத்தை குறைக்க காங். முயற்சி.. சோனியாவின் சொந்த தொகுதியில் சீறிய மோடி
ரே பரேலி : ராணுவத்தை பலவீனமடையச் செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவியுள்ளதாக காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரே பரேலிக்கு பிரதமர் மோடி சென்றார். முதல் முறையாக சோனியா காந்தியின் தொகுதிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதன்பின் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் தமது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் ராணுவத்தை எந்த முயற்சி எடுத்தாவது வலுவடையச் செய்ய வேண்டும், பலம் பெறவைக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்படுகிறோம்.
ஆனால், காங்கிரசோ எவ்வளவு செலவு செய்தாவது ராணுவம் பலம் அடையக் கூடாது என்று நினைத்தவர்களுடன் நட்பு வைத்திருந்தது.ரபேல் போர் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.
சிலர் எப்போதுமே பொய்களைத்தான் பேசுவார்கள், பொய்களைத் தான் ஏற்றுக் கொள்வார்கள். நாட்டின் பாதுகாப்புத்துறை, ராணுவ அமைச்சர், விமானப்படை அதிகாரிகள் அனைவரும் அவர்களுக்கு பொய்சொல்பவர்களாக தெரிகிறார்கள்.
பிரான்ஸ் அரசுகூட பொய் உரைக்கும் அரசாக அவர்களுக்கு மாறிவிட்டது. இப்போது, நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட பொய்கூறுகிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
நாட்டைப்பற்றி அக்கறைகொள்ளாத அவர்கள் என்னமாதிரியான மக்கள். அவர்களுக்கு என்னை வார்த்தைகளால் காயப்படுத்த வேண்டும் என்பது எனக்கு தெரியும். மோடியை ஊழலில் சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உண்மைக்கு ஒருபோதும் அலங்காரம் தேவையில்லை, ஆனால் பொய்கள் அழிந்து விடும். ராணுவத்தின் மீது காங்கிரஸ் மீதான பார்வையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. சிலர் 'பாரத் மாதா கி ஜே' என்ற வாசகத்தை கூறுவதற்கே காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்படுகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.