அயோத்தி வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இழுத்தடித்தது காங்கிரஸ்: அமித்ஷா குற்றச்சாட்டு
லதேகர்: அயோத்தி வழக்கை தொடர்ந்து நடத்தாமல் காங்கிரஸ் கட்சிதான் இழுத்தடித்தது என உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகரில் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று அமித்ஷா பேசியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பதை பொதுமக்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த வழக்கை தொடர்ந்து நடத்தாமல் காங்கிரஸ் கட்சி இழுத்தடித்தது.
தற்போது அயோத்தியில் பிரமாண்டமான கோவில் கட்டுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர்தாஸ் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றிருக்கிறார்.
காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவால் இந்த மாநிலத்தின் ஏழை மக்களுக்கு என்ன கிடைத்தது என்று சொல்ல முடியுமா? கடந்த 70 ஆண்டுகளில் பழங்குடி மக்களுக்கு சாதித்தது என்ன என்பதை சோனியாவும் ராகுலும் விளக்க முடியுமா? உங்களிடம் புள்ளி விவரங்கள் இருக்கின்றனவா?
நாங்கள் ஒவ்வொரு பழங்குடி வட்டங்களிலும் பள்ளிகளைத் திறந்து வைத்திருக்கிறோம். மாநில கனிமவள நிதி ஒன்றையும் பிரதமர் மோடி அமைத்திருக்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.