இலங்கைக்கு நேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கும் நேரும்... சொல்கிறார் மனோகர் பாரிக்கர்
கோவா: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால் இலங்கைக்கு நேர்ந்த கதி தான் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்படும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்து வருகிறது. பா.ஜ.க.தலைவர் அமித் ஷா மாநில வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், கோவாவில் இன்று மாலை கூட்டம் நடைபெற்றது.
இதில், பங்கேற்று பேசிய அமித் ஷா, வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள் என்று வேடிக்கையாக கூறினார்.
அவரை தொடர்ந்து கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர் பேசியதாவது: மனவேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து மோடியை பிரதமராக உழைக்க வேண்டும். இந்த மன உறுதியுடன் பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று திரண்டு உழைத்தால், ராமாயண காலத்தில் இலங்கைக்கு நேர்ந்த கதி போல் காங்கிரஸ் கட்சி அழிந்துப் போகும் என தெரிவித்தார்.