பஞ்சாப் தேர்தல் எக்ஸிட் போல்: ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு மரண அடி! ஆட்சியை கைப்பற்றும் காங்!!
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு மரண அடி கிடைக்கும்; காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு படுபயங்கரமான மரண அடியை வாங்கும் என இந்தியா டுடே- மை ஆக்ஸிஸ் இண்டியாவின் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு (எக்ஸிட் போல்) தெரிவிக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக அகாலிதளம்- பாஜக கூட்டணி அரசுதான் ஆட்சியில் நீடித்து வந்தது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியானது டெல்லிக்கு அடுத்து இங்கும் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்தது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பிரசாரம் மேற்கொண்டது.
பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 4-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியா டுடே- மை ஆக்ஸிஸ் இண்டியா இணைந்து நடத்திய இக்கருத்து கணிப்பு முடிவில் ஆளும் அகாலிதளம்- பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அகாலிதளம்- பாஜக கூட்டணிக்கு மொத்தமே 4 முதல் 7 இடங்கள்தான் கிடைக்குமாம். இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் 17% அளவுக்கு சரிவை சந்திக்குமாம்.
காங்கிரஸ் கட்சி 62 முதல் 71 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றுமாம்.
ஆம் ஆத்மி கட்சி 42 முதல் 51 இடங்களைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுக்கும் என்கிறது எக்ஸிட் போல்.
இது சாணக்யாவின் கணிப்பு:
ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலா 54 இடங்களைப் பெறும். இதில் இரு கட்சிகளுக்கும் தலா 9 இடங்கள் கூடலாம் அல்லது குறையலாம். அகாலிதளம் - பாஜக கூட்டணிக்கு 9 இடங்கள் கிடைக்கலாம். இதில் 5 இடங்கள் கூடலாம் அல்லது குறையலாம். மற்றவர்களுக்கு எந்த இடமும் கிடைக்க வாய்ப்பில்லை.
ஆம் ஆத்மி ஆட்சி...
இண்டியா டிவி- சிவோட்டர் கருத்து கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஜ்தக்- சிசெரோ எக்ஸிட் போல் முடிவின் படி காங் 62-71; ஆம் ஆத்மி 42-51; பாஜக- அகாலிதளம் 4-7 இடங்கள்தான் கிடைக்குமாம்.