ராஜஸ்தானில் 'சதம் விளாசியது' காங்கிரஸ்! ஆட்சிக்கு ஆபத்தில்லை
ஜெய்ப்பூர்: ஹரியானா மாநிலம் ஜிந்த் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ராம்கார் தொகுதியில் காங்கிரஸும், ஜிந்த் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
ராம்கர் தொகுதியில் பெற்ற வெற்றியின் மூலம், ராஜஸ்தானில், 100 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது காங்கிரஸ். ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
200 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 101 எம்எல்ஏக்களாவது தேவை.
ஒரு தொகுதி யில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி, ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. அசோக் கெலாட் முதல்வராக பதவி வகித்து வருகிறார். சச்சின் பைலட் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறாத எஞ்சிய ராம்கர் தொகுதிக்கும்தான் கடந்த 28ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
இங்கு காங்கிரஸ் சார்பில் சாபியா ஜுபைர் கான், பாஜக சார்பில் சுவந்த் சிங் ஆகியோர் நடுவே போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மகன் ஜகத் சிங் இங்கு போட்டியிட்டார்.
இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 83,311 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 71,083 வாக்குகள் பெற்றார். சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதன் மூலம், ராஜஸ்தானில், செஞ்சுரி விளாசி, கூட்டணியுடன் பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.