கர்நாடக தேர்தலில் போட்டியிட வாரிசுகளுக்கே அதிக வாய்ப்பு.. வெடித்த கோஷ்டி பூசல்.. காங். அலுவலகம் சூறை
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி நேற்று தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று காங்கிரஸ் அறிவித்தது. வேட்பாளர் பட்டியலை பார்த்த பல காங்கிரஸ் சீனியர்களுக்கு அதிர்ச்சி. காரணம், முதல்வர் மகன், அமைச்சர் மகள் அல்லது மகள் என பெரும்பாலும் வாரிசுகளின் பெயர்கள்தான் அங்கே நிரம்பி இருந்தது.
கடந்த முறை சித்தராமையா போட்டியிட்ட மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் இம்முறை அவரது மகன் யதீந்திராவுக்கு சீட் கிடைத்துள்ளது. இது அவருக்கு முதல் தேர்தலாகும். அமைச்சர் ஜெயச்சந்திரா மகன் சந்தோஷுக்கு சிக்கநாயகனஹள்ளி தொகுதியிலும், அமைச்சர் ராமலிங்க ரெட்டி மகள் சவுமியா ரெட்டிக்கு பெங்களூரின் ஜெயநகர் தொகுதியிலும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல காங். எம்எல்ஏ கிருஷ்ணப்பா மகன் பிரியாகிருஷ்ணா, மறைந்த முன்னாள் முதல்வர் தரம்சிங் மகன் அஜய்சிங், லோக்சபா எதிர்க்கட்சி குழு தலைவரான, மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்கா கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் முனியப்பா மகள் ரூபா சசிதர், அமைச்சர் பிரகாஷ் ஹுக்கேரி மகன் கணேஷ் ஹுக்கேரி, அமைச்சர் சாமனூர் சிவசங்கரப்பா மகன் மர்ரிகார்ஜுன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சிக்மகளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அக்கட்சியினரே இன்று சூறையாடியுள்ளனர். பல்வேறு தொகுதிகளிலும் இதேபோன்று கட்சிக்காக உழைத்த பிற சீனியர்கள் கலாட்டாவில் இறங்கியுள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் சார்பில் போட்டியிட வழங்கப்படும், 'பி-பார்ம்' நாளை வழங்கப்பட உள்ளது. ரிசார்ட் ஒன்றில் வைத்து அறிவிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் இந்த பார்ம் வழங்கப்பட உள்ளது. கோஷ்டி பூசலால் கர்நாடக காங்கிரசில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.