இந்தியாவில் அச்சத்துடன் வாழும் சிறுபான்மையினர்..... இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி சாடல்
டெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது; இந்த அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாராயணமூர்த்தி கூறியதாவது:
நான் ஒரு அரசியல்வாதி அல்ல.. எனக்கு அரசியலில் ஆர்வமும் இல்லை.. அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிக்கவும் விரும்பவில்லை.
ஆனால் இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் மனதில் ஒருவகையான அச்சம் ஏற்பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம்.
1960களில் தென்னிந்தியர்களுக்கு எதிராக மும்பையில் சிவசேனா பிரசாரம் மேற்கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது.. இது தொடர்பாக எனக்கு நிறைய இ மெயில்கள் வருகின்றன.
மத்திய, மாநில அரசுகளின் முதல் முன்னுரிமை என்பது இத்தகைய அச்சத்தை அகற்றி, புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்பதுதான். நான் இங்கு பாதுகாப்பாக வாழ்கிறேன்; எனக்கு இங்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால்தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட முடியும்.
இவ்வாறு நாராயணமூர்த்தி தெரிவித்தார்.