ஹைதராபாத் தொழிலதிபரை "ஏகே 47" ரக துப்பாக்கி முனையில் கடத்த முயன்றது 'கான்ஸ்டபிள்'?
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தொழிலதிபர் நித்யானந்தரெட்டியை ஏ.கே. 47 ரக துப்பாக்கி முனையில் கடத்த முயன்றது நக்சல் எதிர்ப்பு படையணியைச் சேர்ந்த முன்னாள் கான்ஸ்டபிளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் கேபிஆர் பூங்கா அருகே அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் துணைத் தலைவர் நித்யானந்தரெட்டியை மர்ம நபர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கி முனையில் நேற்று முன் தினம் கடத்த முயன்றார். காலையில் நடைபயிற்சியை முடித்துவிட்டு தனது ஆடி காரில் நித்யானந்த ரெட்டி ஏறி அமர முயன்றார்.
அப்போது காருக்குள் பதுங்கி இருந்த மர்ம நபர் நித்யானந்தரெட்டியை துப்பாக்கி முனையில் கடத்த முயன்றார். இதனைத் தடுக்க மர்ம நபருடன் நித்யானந்தரெட்டி போராடினார். அப்போது 'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றும் மர்ம நபருடன் மல்லுக்கட்டியவாறே நித்யானந்த ரெட்டி கூறியிருக்கிறார்.
இருவருக்கும் இடையேயான மோதலின் போது காரின் கண்ணாடிகளில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தன. பின்னர் நித்யானந்தரெட்டியின் சகோதரர் பிரசாத் அந்த இடத்துக்கு வந்து மர்ம நபரிடம் இருந்து நித்யானந்தரெட்டியை மீட்டார்.
ஆனால் மர்ம நபர் துப்பாக்கி மற்றும் ஒரு கைப் பை, தொப்பி ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார். காரில் கிடந்தது ஏ.கே. 47 ரக துப்பாக்கி என்றும் இது ஓராண்டுக்கு முன்னர் நக்சல் எதிர்ப்பு படையணியினரால் காணாமல் போனது என்று புகார் கொடுக்கப்பட்டது என்பதும் தெரிய வந்தது,
அத்துடன் காரில் இருந்த பையில் மளிகை சாமான்கள் வாங்கிய பில் இருந்தது. அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆராய்ந்தனர்.
அப்போது காரில் இருந்து கைப்பற்ற தொப்பியை அணிந்த ஒரு நபர் அந்த கடைக்கு வந்து சென்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஏகே 47 ரக துப்பாக்கி காணாமல் போனதாக புகார் கொடுத்த ஓபுலேசு என்ற கான்ஸ்டபிளின் செல்போன் தொடர்புகளை போலீசார் ஆராய்ந்தனர்.
அவர் ஹைதராபாத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அனந்தபூரில் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நக்சல் தேடுதல் வேட்டையின் போது ஓபுலேசும் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் ஏ.கே. 47 ரக துப்பாக்கி தொலைந்து போனதாக புகார் தெரிவிக்கபப்ட்டிருந்தது. அவர் தற்போது கலால் துறையில் பணியாற்றுகிறார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஆந்திராவின் முன்னாள் தலைமைச் செயலர், ஏ.கே. 47 ரக துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு ரூ10 லட்சம் பிணைத் தொகை செலுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போதும் அதே பாணியில் பணத்துக்காகத்தான் நித்யானந்தரெட்டியையும் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்..