எம்.பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான, கிரிமினல், நிலுவை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் பாணியில் சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட ஆயுட் கால தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையிலுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நவின் சின்ஹா அமர்வு முக்கியம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுநல வழக்கு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், தேர்தலில் போட்டியிடுவோருக்கு கல்வி தகுதி நிர்ணயம் செய்ய வேண்டும், அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுள்கால தடை விதிக்க வேண்டும் என்பது என்பது போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் ஆணையம் ரெடி
இதுகுறித்து தேர்தல் ஆணையம், மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கருத்து கேட்டிருந்தது. மத்திய அரசு அளித்த பதிலில், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு ஆயுட்கால தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தது. மத்திய தேர்தல் ஆணையம், தாங்களும் இந்த யோசனைக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது.
எத்தனை வழக்குகளில் தீர்ப்பு?
இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை முன் வைத்தது. 2014ம் ஆண்டு நிலவரப்படி, எம்.பி., எம்எல்ஏக்கள் தொடர்பான 1581 வழக்குகள் நிலுவையிலுள்ளதை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், அதில், ஓராண்டுக்குள் முடிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றங்கள்
மேலும், விரைவு நீதிமன்றங்கள் பாணியில், எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான கிரிமினல் நிலுவை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதுகுறித்து மத்திய அரசு விளக்கமான பதிலை தாக்கல் செய்ய 6 வாரங்கள் அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.