மாநிலத்திற்கு ஒரு முடிவெடுக்கும் ஆளுநர்கள்.. கொந்தளிப்பு சூழல்.. இந்தியாவில் அரசியல் சாசன சிக்கல்?
Recommended Video
பெங்களூர்: நாடு முழுக்க அரசியல் சாசன சிக்கலை உருவாக்கிவிட்டது கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் செயல்பாடு.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பதா, பெரும்பான்மைக்கு தேவைப்படும் இடங்களை கொண்டுள்ள காங்கிரஸ்-மஜத கூட்டணியை அழைப்பதா என்ற தன் முன்பாக இருந்த இரு வாய்ப்புகளில், முதலாவதை தேர்ந்தெடுத்துள்ளார் ஆளுநர்.
இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் படியேறியுள்ளது காங்கிரஸ். ஆளுநரின் இந்த முடிவு இப்போது தேசிய அளவில், பெரிய அரசியல் சாசன பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளது. ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? சிறு பிளாஷ் பேக்.
கோவா கதையை பாருங்க
40 நாற்பது உறுப்பினர்களைக்கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 17 உறுப்பினர்களோடு தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், 13 இடங்கள் மட்டுமே பெற்ற பாஜக தனக்கு கூட்டணி பலம் இருப்பதாக கூறியதையடுத்து அக்கட்சியை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார் ஆளுநர். இப்போது, அங்கே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மணிப்பூரில் அதே கதி
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 28 எம்எல்ஏக்களை கொண்ட தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 21 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றபோதிலும், பாஜகவை ஆளுநர் அழைத்தார். இப்போது, அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேகாலயாவில் 2 சீட்தான்
இதேபோல 60 உறுப்பினர்களைக்கொண்ட மேகாலயா சட்டசபைக்கு கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில், அங்கு 21 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வந்தது. ஆனால் வெறும் இரு இடங்களை வென்ற பாஜகவின் ஆதரவைப் பெற்றுக்கொண்ட, 19 எம்எல்ஏக்களை கொண்ட என்.பி.பி கட்சியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைத்தார். அங்கு இப்போது பாஜக - என்பிபி கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.
ஊருக்கு ஒரு நியாயம்
இப்படி ஊருக்கெல்லாம் ஒரு நியாயமும், கர்நாடகாவில் மட்டும் அப்படியே உல்டா நியாயமும் ஆளுநரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது நாடு முழுக்க அரசியல் சாசன சிக்கல் போன்ற சூழல் உருவாகியுள்ளது. அரசியல் சாசனம் பொதுவானது. அதை பாதுகாக்க வேண்டிய ஆளுநர்களோ, ஆளுக்கொரு முடிவை, சூழலுக்கு ஒரு முடிவை எடுப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மக்களாட்சிக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடு என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
கொந்தளிப்பு சூழல்
கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ், பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம் போன்றவை தங்களை ஆட்சிக்கு அழைக்குமாறு போராட்டத்தில் இறங்கியுள்ளன. தர்க்க ரீதியாக பார்த்தால் இது சரிதான் என்பதால் இந்த போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அரசியல் சாசனத்திற்கு எதிரான, விதிமுறைகளுக்கு மீறிய செயல்பாடுகளால் நாடு முழுக்க குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.