உ.பி. தேர்தலுக்கு தயாராகும் பாஜக... அயோத்தியில் நவ.9-ல் ராமர் கோவில் கட்டும் பணி தொடக்கம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நவம்பர் 9-ந் தேதியன்று ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்கப் போவதாக சாதுக்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜெய்னி நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஒன்று கூடிய சாதுக்கள், நவம்பர் 9-ந் தேதி ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான சாதுக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் பாஜக 71 இடங்களை அள்ளியது. இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தி சட்டசபை தேர்தலில் பாஜகவை வெல்ல வைத்துவிடலாம் என்பது இவர்களது வியூகம்.
அதே நேரத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில் சாதுக்களின் அறிவிப்பு கடும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.