தலையில் பாய்ந்த 2 மீட்டர் இரும்புக் கம்பி... 5 மணி நேரம் போராடி அகற்றிய டாக்டர்கள்!
மும்பை: மும்பையில் எதிர்பாராத விதமாக கட்டிடத் தொழிலாளியின் தலையில் பாய்ந்த 2 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை, டாக்டர்கள் ஐந்து மணி நேரம் போராடி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
மும்பை, மலாட் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக பணி புரிந்து வந்தவர் முகமது குட்டு என்ற 24 வயது இளைஞர்.
A 24-yr-old Indian construction worker survives after a rod pierced into his head; Doc is expecting full recovery pic.twitter.com/R1evZKQ7Dr
— People's Daily,China (@PDChina) February 20, 2016
சம்பவத்தன்று எதிர்பாராத விதமாக முகம்மதுவின் தலையில் 2 மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பி பாய்ந்தது. தலையின் முன்புறம் பாய்ந்த அந்தக் கம்பி, பின்புறமாக வெளியில் வந்தது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முகம்மது. அவரை மருத்துவர்கள் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்த போது, அவரது தலையில் இரும்புக் கம்பி ஆழமாக பாய்ந்து வெளியே வந்திருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் அந்த இரும்புக் கம்பியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 5 மணி நேர அறுவைச் சிகிச்சையின் முடிவில் அந்த இரும்புக் கம்பிய பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின் முகம்மதுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இன்னும் மூன்று மாதங்களில் அவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சக ஊழியர்கள், சம்பவத்தன்று முகம்மதுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், தலையில் கம்பி பாய்ந்த நிலையிலும் சுயநினைவோடு அவர் உதவி கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.