தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்களுக்கு இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
டெல்லி: திரை அரங்கு உரிமையாளர்கள் படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் தீப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ருபாசி மல்டிபிளக்ஸில் படம் பார்க்க ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது தியேட்டருக்குள் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லக் கூடாது என மல்டிபிளக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து அந்த குடும்பம் திரிபுரா மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அந்த குடும்பத்தாருக்கு ரூ.10 ஆயிரம் மல்டிபிளக்ஸ் வழங்க வேண்டும் என கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மல்டிபிளக்ஸ் நிர்வாகம் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை ஆகும். அதனால் தியேட்டருக்கு வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டிலை உள்ளே அனுமதிக்காவிட்டால் தியேட்டர் உரிமையாளர்களே படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை தாங்கள் நடத்தும் கடைகளில் தான் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது.
தியேட்டர்களில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. சிலரால் அவ்வளவு பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியாது. உரிய நேரத்தில் குடிக்க நீர் இல்லாவிட்டால் படம் பார்ப்பவர்கள் மயங்கி விழும் அபாயம் உள்ளது. அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக நீர் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.