”இன்டெர்நெட்” சேவைக் குறைபாடு தொல்லை இனி இல்லை- எளிதாக்கிய புதிய வசதியை ”டிராய்” அறிமுகம்
டெல்லி: செல்போனில் இணையதள சேவையை பெறவும், துண்டிக்கவும் தொலைத் தொடர்பு ஆணையம் "டிராய்" புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூடுதல் வருவாய் பெறும் நோக்கத்தில், செல்போனில் இணையதள சேவையை "டிஆக்டிவேட்" செய்யும் நடைமுறையை செல்போன் சேவை நிறுவனங்கள் சிக்கலானதாக வைத்திருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிரய் நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, சந்தாதாரர்கள், தங்கள் செல்போன்களில் இணையதள சேவையை "ஆக்டிவேட்" செய்யவோ அல்லது "டி ஆக்டிவேட்" செய்யவோ, 1925 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு மூலமாகவோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ தகவல் தெரிவித்தால் போதும்.
இந்த வசதி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து இந்த கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்புவதாக இருந்தால், இணையதள சேவையை ஆக்டிவேட் செய்வதற்கு "ஸ்டார்ட்" என்றும், டிஆக்டிவேட் செய்வதற்கு "ஸ்டாப்" என்றும் டைப் செய்து அனுப்ப வேண்டும். அதற்கு சேவை நிறுவனங்கள் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
மேலும், இணையதள சேவையின் பயன்பாட்டு கால அளவு முடிவடைந்தது தெரியாமல் உபயோகிக்கும் சந்தாதாரர்களிடம் செல்போன் சேவை நிறுவனங்கள், கணிசமாக பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, பயன்பாட்டு காலத்துக்கு மேல் உபயோகிப்பவர்களிடம், அவர்களின் சம்மதத்தைப் பெறாமல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இணையதள டேட்டா கார்டின் பயன்பாட்டு காலம் முடிவடைய போவதை சந்தாதாரர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.