லோக்சபா தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கும் அருண் ஜேட்லி!!
அமிர்தசரஸ்: லோக்சபா தேர்தலில் முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி களமிறங்குவது அக்கட்சியினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
பாரதிய ஜனதாவின் ராஜ்யசபா தலைவராக இருக்கும் அருண் ஜேட்லி இதுவரை தேர்தலில் நின்றது இல்லை. இப்போது தான் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக அமிர்தசரஸ் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் அருண் ஜேட்லி ஈடுபடுட்டு வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தொகுதியில் 3 முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. ஆனால் சித்துவுக்கு பாரதிய ஜனதா அடுத்தடுத்து கொடுத்து வந்த வாய்ப்பை அவர் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பயன்படுத்தாத சித்து
அத்துடன் பஞ்சாப் மாநில பாஜகவுடன் தொடர்ந்தும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார் சித்து. அதேபோல் பாஜக கூட்டணி அரசான பஞ்சாப் ஆளும் சிரோமணி அகாலி தளத்தையும் சகட்டுமேனிக்கு தாக்கி வந்தார் சித்து. அதனால் சித்து மீது மிகவும் அதிருப்தி நிலவியது. அமிர்தசரஸ் தொகுதி மக்களோ சித்துவை காணவில்லை என்றெல்லாம் போஸ்டர் அடித்தும் ஒட்டி அசிங்கப்படுத்தினர்.
லோக்சபா தேர்தலில் அருண் ஜேட்லி
இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் ராஜ்யசபா தலைவரான அருண் ஜேட்லி முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பினார். டெல்லியைச் சேர்ந்த அருண் ஜேட்லி போட்டியிட விரும்பியதும் சித்துவின் அமிர்தசரஸ் தொகுதிதான். அதேபோல் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கும் கூட அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடலாம் என முடிவு செய்தார்.
சித்துவுக்கு குருஷேத்ரா..
இதனால் லோக்சபா தேர்தலில் ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதியை சித்துவுக்கு ஒதுக்க பாஜக விரும்பியது. ஆனால் சித்துவோ எனது அரசியல் குரு அருண் ஜேட்லி. அவர் போட்டியிட விரும்புவதால் தேர்தலைவிட்டு விலகி இருக்கிறேன் என்று ஒரு அதிரடியைக் காட்டினார். இப்போது அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடுகிறார் அருண் ஜேட்லி.
ஏன் லோக்சபா தேர்தல்?
இத்தனை ஆண்டுகாலம் ராஜ்யசபா எம்.பியாக இருந்துவிட்டு திடீரென அருண் ஜேட்லி, லோக்சபா தேர்தலில் களம் காண்பது ஏன்? என்ற இயல்பான கேள்விக்கு சட்டென பாஜக வட்டாரங்கள் சொல்லும் பதில் இதுதான்..
தலைவர்- பிரதமர் கனவுதான்..
பாஜகவில் எல்லோருக்கும் இருக்கும் அடுத்த தலைவர், அடுத்த பிரதமர் கனவு அருண் ஜேட்லிக்கும் இல்லாமலா இருக்கும்? அதுவும் மோடி அலை வீசுவதாக நம்புவதால் லோக்சபா தேர்தலில் நிச்சயம் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் துணிச்சலாக களம் இறங்குகிறார் அருண் ஜேட்லி என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
காங்கிரஸின் அமரீந்தர் சிங் போட்டியில்லை..
அருண் ஜேட்லிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களைப் போல தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் மேற்கொள்கிறேன் என்று காங்கிரஸ் மேலிடத்தில் சொல்லி பம்மிவிட்டாராம் அமரீந்தர் சிங். அதனால் அமரீந்தர் சிங் மீது செம கடுப்பில் இருக்கிறதாம் காங்கிரஸ் மேலிடம். இது அருண் ஜேட்லிக்கு கிடைத்த முதல் வெற்றி என்கின்றனர் பாஜகவினர்.
நம்பிக்கைதான்..
லோக்சபா தேர்தலில் வென்று காட்டினால்தான் பாஜகவில் தமது 'தலைவர்' கம் "பிரதமர் வேட்பாளர்" வேட்கையை வெல்ல முடியும் என்று பலமாகவே நம்பும் அருண் ஜேட்லியின் கனவு நிறைவேறுமா?