வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை அதிர வைக்கும் நில நடுக்கம்.. பீதியில் மக்கள்!
அஸ்ஸாமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர்: அஸ்ஸாமில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் தற்போது மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் வட மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நில அதிர்வுகளும் நில நடுக்கங்களும் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
மக்கள் தெருக்களில் தஞ்சம்
காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
வீடுகளுக்குள் செல்ல அச்சம்
நிலநடுக்கத்தால் கடும் குளிரிலும் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சப்பட்டு வீதிகளிலேயே நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் நிலநடுக்கம்
அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பூட்டானிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் தற்போது மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சாலைகளில் குவிந்த மக்கள்
ரிக்டர் அளவில் 4.2 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.