கட்டுப்பாட்டை இழந்த லாரி.... 20 உயிர்களைக் காவு வாங்கிய துயரம் - வீடியோ
சித்தூர் ஏர்பேட்டில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஓடி, பேருந்துக்காக காத்து நின்ற மக்கள் மீது மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே ஏர்பேட்டில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் 20 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் சித்தூர் அருகே ஏர்பேட்டில் பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு தாறுமாறாக தறிகெட்டு ஓடிய லாரி, பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியது.
பிறகு அங்கிருந்த சிறு கடையை சிதைத்தது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த லாரி தறிகெட்டு ஓடிய பொழுதில் அங்கு மக்கள் போராட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் லாரி மோதியதில் சிலர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளதால் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தால் அந்த இடமே ரத்தக்காடாக இருந்தது. மக்களின் அலறல் சத்தமும் கூச்சலும் துயர் நிறைந்ததாக இருந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.