புதிய எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்டுப்படுத்துறது கஷ்டமாச்சே.. சொல்வது பிரசாந்த் பூஷண்
டெல்லி: புதிய எம்.எல்.ஏ.க்களை ஆம் ஆத்மி கட்சி கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாகும் என்று ஆம் ஆத்மி கட்சியின் இணை நிறுவனரான பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதையடுத்து ஆம் ஆத்மியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக கூடி முதல்வராக கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து அவரும், கட்சியின் மூத்த தலைவர்களும் துணை நிலை ஆளுநர் நஜிப் ஜங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். புதிய அரசின் பதவி ஏற்பு விழா 14-ந் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை டெல்லியே கொண்டாடியபோது, அக்கட்சியின் இணை நிறுவனரான பிரசாந்த் பூஷண் எந்த ஒரு கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியே இருந்தார்...
ஆம் ஆத்மி கட்சியில் வேட்பாளர் தேர்வில் தனது ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதால் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
தற்போது, புதிய எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்துதல் ஆம் ஆத்மிக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அத்துடன் பிற கட்சிகளில் இருந்து கட்சிக்குள் வந்தவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது முற்றிலும் முறைகேடானது... தேர்தலில் போட்டியிடுவது அவர்களுக்கு தொழில் போன்றது, ஆனால் இது தொடர்பாக மேலும் எதுவும் தெரிவிக்கப்போவது இல்லை. இப்பிரச்சனையை நான் கட்சிக்குள் எழுப்புவேன் என்றும் கூறியுள்ளார்.