நாடாளுமன்றம் நாளை தொடக்கம்- முத்தலாக் உட்பட சர்ச்சைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு
நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய மசோதாக்கலை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
Recommended Video
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிப்பது, முத்தலாக் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என தெலுங்குதேசம் கட்சி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் தெலுங்குதேசம் படு தீவிரமாக இருக்கிறது.
லோக்சபாவில் பாஜகவுக்கு 273 எம்.பிக்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவை 272 எம்.பி.க்கள். இதனால் தெலுங்குதேசத்தின் முயற்சி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதேநேரத்தில் இந்த கூட்டத் தொடரில் ஏராளமான மிக முக்கியமான, சர்ச்சைக்குரிய மசோதாக்களை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசும் மும்முரமாக இருக்கிறது.
123-வது பிரிவு திருத்தம்
குறிப்பாக தேர்தல்களை கருத்தில் கொண்டு 5 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 123வது பிரிவு திருத்தம் மிக முக்கியமானது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தற்போதைய இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நடவடிக்கைக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது மத்திய அரசின் எண்ணம். ஆனால் இதற்கு சமூக நீதி ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் இது நிறைவேறினால் வரும் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை தங்கள் வசப்படுத்த முடியும் என்பதும் பாஜகவின் கணக்கு.
பழங்குடிகளாக பல சமூகங்கள் சேர்ப்பு
இதையடுத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா. இதில் அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தமிழகம் மற்றும் திரிபுராவில் வசிக்கும் பல சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா. தமிழகத்தில் நரிக்குறவர்கள், குருவிக்காரன், மலையாளி கவுண்டர் மற்றும் இருளர் சமூகங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். இதும் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. மலையாளிகள் என்கிற பழங்குடியினர்தான் உள்ளனர்; மலையாளி கவுண்டர் என யாரும் கிடையாது என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது தங்களுக்கு கை கொடுக்கும் என்பது பாஜகவின் திட்டம்.
வாடகைத்தாய் ஒழுங்குமுறை
வாடகைத் தாய் ஒழுங்கு முறை மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. வாடகைத் தாயாக இருப்பவர், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் 'நெருங்கிய உறவினராக' மட்டும் இருக்க வேண்டும் என திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் வெளிநாட்டவர், இந்திய பெண்களை வாடகைத் தாயாக பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது.
முத்தலாக் மசோதா
முஸ்லிம் பெண்களை முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மசோதா இக்கூட்டத் தொடரில் மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போதும் நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது முத்தலாக் மசோதா விவகாரம்.
தேசிய மருத்துவ ஆணையம்
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதைய இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைப்பதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த ஆணையமானது தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 40% இடங்களை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றதாக உருவெடுக்கும். இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது பெரும் புயல் கிளம்பும் என்பதில் சந்தேகம் இல்லை.