பாஜக தோல்விக்கு அதீத நம்பிக்கையே காரணம்... சத்ருஹன் சின்ஹா சரமாரி தாக்கு!
உ.பி, பீஹார் லோக்சபா தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து அதே கட்சியை சேர்ந்த எம்பி சத்ருஹன் சின்ஹா பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி : பாஜக எம்பி சத்ருஹன்சின்ஹா தனது கட்சியையும் பிரதமர் மோடியையும் டுவிட்டரில் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார். உத்திரபிரதேசம் மற்றும் பீஹார் லோக்சபா தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து அவர் விமர்சித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் 2 லோக்சபா தொகுதிகள் மற்றும் பீஹாரில் 1 லோக்சபா தொகுதிக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது அந்தக் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கான காரணங்களை பாஜக தலைமை ஆராய்ந்து வருகிறது.
உ.பி தேர்தல் தோல்விக்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து செயல்படுவதை பொருட்படுத்தாததன் விளைவை பாஜக சந்தித்துள்ளது. பாஜகவின் இந்த மோசமான தோல்விக்கு அதே கட்சியை சேர்ந்த எம்பி சத்ருஹன் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடியை தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தெடுத்துள்ளார்.
அதீத நம்பிக்கையால் தோல்வி
நான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன், அகந்தை, முன்கோபம் மற்றும் அதீத நம்பிக்கை தான் ஜனநாயக அரசியலின் மிகபெரிய உயிர்க்கொல்லிகள். இது ட்ரம்ப்பாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தாலும் சரி என்று ட்வீட்டியுள்ளார் சத்ருஹன் சின்ஹா.
மக்கள் சொல்லும் செய்தி
மற்றொரு ட்வீட்டில் லோக்சபா இடைத்தேர்தல் முடிவுகள் கட்சியின் தலைமைக்கு மக்கள் சொல்லும் செய்தி. 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னர் அதனை சரி செய்ய வேண்டும். "உ.பி மற்றும் பீஹார் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நம் மீதான எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர். மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர் என்பதை இது உணர்த்துகிறது.
சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது
நாம் விரைவில் இந்த சூழலில் இருந்து மாறுவோம் என நம்புகிறேன், இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்த முடிவுகள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பவை இதனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. என்னுடைய நண்பர் யோகி ஆதித்யநாத்திற்காக நான் வருந்துகிறேன். தன்னுடைய சொந்த தொகுதியிலேயே பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. அதீத நம்பிக்கையே இந்த படுதோல்விக்கு காரணம் என்றும் சத்ருஹன் சின்ஹா ட்வீட்டியுள்ளார்.
|
அகிலேஷ், மாயாவதி, தேஜஸ்விக்கு வாழ்த்து
அதே சமயம் சத்ருஹன் சின்ஹா சமாஜ்வாதி கட்சியின் அபிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதே போன்று ராஜ்ட்ரிய ஜனதாக தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனுக்கும் சத்ருஹன் சின்ஹா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.