பிரிட்டிஷ் ஆட்சியை விட கொடுமையானது இந்திரா ஆட்சி... பீகார் அரசு இணையத்தில் சர்ச்சைக் கருத்து
பாட்னா: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை விட மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலம் மோசமானது என்று பீகார் மாநில அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பீகார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இத்தகைய தகவல் இடம்பெற்றிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் வரலாறு குறித்த அந்த இணையத்தள பகுதியில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைப் பிரகடனம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், நவீன இந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத் தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணின் பங்களிப்பு முக்கியமானது. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஒடுக்குமுறையைக் கடுமையாக எதிர்த்தவர் அவர். இந்திரா காந்தியின் ஆட்சியின்போது நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, ஜெய்பிரகாஷ் நாராயணன் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய காந்தியை எவ்வாறு பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்ததோ, அதேபோல், அடக்குமுறையை எதிர்த்துக் குரல் கொடுத்த ஜெய்பிரகாஷ் நாராயணனை இந்திரா அரசு கைது செய்தது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் சந்தன் யாதவ் கூறுகையில், பீகார் அரசின் இணையதளப் பக்கத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக உள்ளன. இந்த விவகாரத்தை முதல்வர் நிதீஷ்குமாரிடம் கொண்டு செல்ல உள்ளோம் என்று அவர் கூறினார்.