ஓட்டு நப்பாசையில் ரஜினி, காங்கிரஸை வீழ்த்தியதற்கு வினோத் ராய் தேர்வு- பத்ம விருதுகளில் பரபர சர்ச்சை
டெல்லி: நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மிக கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் சிஏஜி வினோத் ராய் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பாஜக ஆட்சிக் காலத்திலும் தங்களுக்கு ஆதரவானவர்கள் ஒரு சிலருக்கு நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன... அப்போதெல்லாம் பெரியதாக சர்ச்சை வெடித்தது இல்லை.
ஆனால் இம்முறை நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அடுத்ததாக பெருமிதப்படக் கூடிய பத்ம விருதுகளை வழங்கியதில் ஏகத்துக்குமான விமர்சனங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. குறிப்பாக "அரசியல் உள்நோக்கத்துடன்" பலருக்கும் இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது எதிர்க்கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டு.
நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் திரை உலகில் சாதனை படைத்தார் என்பதற்காக ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் பத்ம விபூஷணும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கால்நூற்றாண்டு டிராமா
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை கடந்த கால் நூற்றாண்டுகாலமாக அரசியலுக்கு வருவதாக ஒரு பூச்சாண்டி காண்பித்து வருகிறவர். குறிப்பாக அவரது புதிய திரைப்படம் வெளியாகும் நேரத்தில் 'ரசிகர்களை' உசுப்பேற்றும் வகையில் அரசியல் சார்ந்து, தமிழர்கள் நலன் சார்ந்து ஏதேனும் ஒரு அறிவிப்பை பூடகமாக வெளியிட்டு 'கல்லாபெட்டியை' நிரப்புகிற யுக்தியை கடைபிடித்து வருகிறவர்.
ரஜினி வாய்ஸ்
1996ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் கொடுத்த 'வாய்ஸ்' தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த உதவியது. ஆனால் அதற்கு பிறகு ரஜினிகாந்த் கொடுத்த எந்த வாய்ஸையும் தமிழக மக்கள் ஏற்கவில்லை. இருந்தபோதும் ரஜினியின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காதா என ஒவ்வொரு அரசியல் காட்சியும் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றன...
பாஜக நப்பாசை
இதில் தமிழகத்தில் எப்படியாவது கால் பதித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற பாஜக கடந்த சில ஆண்டுகளாக மும்முரமாக இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரசாரத்துக்கு வந்த பிரதமர் வேட்பாளர் மோடி, ரஜினியை வீட்டுக்கு நேரில் போய் சந்தித்தார். ரஜினியை தமது நெருங்கிய நண்பராக மோடி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காட்டிக் கொள்வது உண்டு.
பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர் ரஜினிகாந்த் என்ற பிம்பத்தை நிலைநிறுத்துவதன் மூலம் தமிழக சட்டசபையில் ரஜினி ரசிகர்களின் ஆதரவை அள்ள வேண்டும் என்ற வியூகத்தின் ஒருபகுதியாக தற்போது அவருக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்த பத்மவிபூஷண் விருதை ரஜினிக்கு கொடுத்துவிட்டதாலேயே அப்படியே அத்தனை ரஜினி ரசிகர்களின் வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்கு போய்விடும் என 'நப்பாசை' கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக.... இதைத்தான் சமூக வலைதளவாசிகளும் வெளுவெளுவென வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
|
வினோத் ராய்
இதேபோல் மத்திய அரசின் முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியான வினோத் ராய்க்கும் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது ஒரே சாதனை என்பது, 'யூகத்தின்' அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகளால் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசால் ரூ1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற அறிக்கை கொடுத்ததுதான்.
குருமூர்த்தி...
வினோத் ராயின் அறிக்கையின் அடிப்படையில் ஆடிட்டர் குருமூர்த்தி ஊடகங்களில் பக்கம் பக்கமாக எழுதினார். குருமூர்த்தியும் தற்போது மத்திய அரசு நியமித்த பத்ம விருதுக்கான தேர்வு கமிட்டியில் ஒருவராக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.