நீதிபதிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் செல்லமேஸ்வர் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தீபக் மிஸ்ரா!
நீதிபதிகள் லஞ்சம் பெற்ற வழக்கில் செல்லமேஸ்வர் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை தீபக் மிஸ்ரா ரத்து செய்ததில் பிரச்சனை வெடித்தது.
டெல்லி: நீதிபதிகள் லஞ்சம் பெற்ற வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் உத்தரவிட்டதை சில மாதங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ரத்து செய்ததில் இருந்துதான் நீதிபதிகளிடையேயான பிரச்சனை வெடிக்க தொடங்கியது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகள். நில அபகரிப்பு வழக்கில் தீபக் மிஸ்ரா மீது சிபிஐ குற்றம்சாட்டிய விவகாரம் ஒன்று பரபரப்பை கிளப்பியது.
இதன்பின்னர் ஒடிஷா மருத்துவ கல்லூரி விவகாரம் புயலைக் கிளப்பியது. அதில்தான் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும் லஞ்ச புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒடிஷா மருத்துவ கல்லூரி விவகாரம் என்ன?
ஒடிஷாவை சேர்ந்தது பிரசாத் கல்வி அறக்கட்டளை. இதன் மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்தது. இதனையடுத்து பிரசாத் கல்வி அறக்கட்டளை நீதிமன்றத்துக்குப் போனது.
இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பைப் பெற்றுத்தருவதாக விஸ்வநாத் அகர்வாலா என்ற இடைத்தரகர் பிரசாத் கல்வி அறக்கட்டளையை நாடுகிறார். அத்துடன் ஒடிஷா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறி பிரசாத் அறக்கட்டளையிடம் விஸ்வநாத் அகர்வாலா பல கோடி ரூபாய் பணமும் பெற்றுக் கொண்டார்.
இது ஒடிஷாவில் புயலைக் கிளப்ப சிபிஐ விசாரணை நடத்தி முன்னாள் நீதிபதி குட்டூசியை கைது செய்தது. விஸ்வநாத் அகர்வாலா, பிரசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் என்.ஜி.ஓ ஒன்றின் சார்பாக நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 8-ந் தேதி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் முன்பாக நவம்பர் 10-ந் தேதி விசாரிக்கப்பட இருந்தது.
அதேநேரத்தில் இதே விவகாரம் தொடர்பாக காமினி ஜெய்ஸ்வால் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 9-ந் தேதி வழக்கு தொடர்ந்தார். நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் முன்பு ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இதை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். இதை ஏற்று தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் உத்தரவிட்டது.
பிரசாத் பூஷன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் காமினி ஜெய்ஸ்வால் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதன்பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலானந் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூடி, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. வழக்குகளை எந்த பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என கூறியது.
இப்படி வழக்குகளை யார் விசாரிப்பது என்பதுமட்டுமே பிரச்சனை அல்ல. இந்த நீதிபதிகள் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் தீபக் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்ததும் ஒரு காரணம்.
இதை உச்சநீதிமன்றத்தில் தமது வாதத்தின் போது, தலைமை நீதிபதி மிஸ்ரா மீதும் எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். இதனால் கோபமடைந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என எச்சரித்தார். இதில் அதிருப்தி அடைந்த பிரசாந்த் பூஷண், விசாரணையில் இருந்து வெளியேறினார்.
இப்படித்தான் நீதிபதிகளிடையே பிரச்சனை உருவாகி இப்போது பூதாகமராக வெடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.