புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டம்- இது குடும்ப பஞ்சாயத்து: தலைமை நீதிபதி கருத்து
டெல்லி: புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டத்தை நடத்திய சர்ச்சை குடும்ப விவகாரம் என்றும் நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 24 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கு பெறும் கருத்தரங்கம் புனித வெள்ளியான கடந்த 3-ந் தேதியன்று டெல்லியில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நீதிபதிகளை இரவு விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி.
ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் புனித வெள்ளி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் பிரதமர் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியாது என கடிதம் மூலம் தெரிவித்தார். இது பலத்த சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இதற்கு பதில் சொல்லும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து அளித்துள்ள பேட்டியில் 'நான் தான் குடும்பத்தின் தலைவர். குடும்பத்தில் யாருக்காவது கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.