கட்டாய மதமாற்ற சர்ச்சைக்கு காரணமான ராஜேஷ்வர் சிங்கை 'லீவில்' போக சொன்ன ஆர்.எஸ்.எஸ்.
ஆக்ரா: கட்டாய மதமாற்ற சர்ச்சைக்குக் காரணமனா ஜக்ரன் சமிதியின் தலைவர் ராஜேஷ்வர் சிங்கை 'லீவில்' அனுப்பி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
உத்தரப்பிரதேசத்தில் டி.ஜே.எஸ். எனப்படுகிற தார்ம் ஜக்ரன் சமிதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிளைகளில் ஒன்று. கடந்த பல ஆண்டுகளாக கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை மீண்டும் இந்துக்களாக மதமாற்றம் செய்வதாக கூறி வருகிற ராஜேஷ்வர்சிங்தான் இதன் தலைவர்.
மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்துமதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சிகளை தீவிரமாக முன்னெடுத்தார் ராஜேஷ்வர் சிங். ஆக்ராவில் 100 முஸ்லிம்களை இந்து மதத்துக்கு மாற்றியதாக வெளியான சர்ச்சைக்கு காரணகர்த்தாவும் இவர்தான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள், 'கட்டாய மதமாற்றங்களை' நடத்தப் போய் பெரும் களேபரமானது.
இந்த களேபரத்தின் உச்சமாக, 2021-க்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்கிவிடுவேன். அப்போது இந்தியாவில் ஒரு முஸ்லிமோ கிறிஸ்துவரோ இருக்க முடியாது. ஒன்று இந்து மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.. இல்லையெனில் அவர்கள் நாட்டை ஓடிவிட வேண்டும் என்றெல்லாம் கொக்கரித்தார் ராஜேஷ்வர் சிங். இந்த விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கியும் போனது.
பெரும் தலைவலியாக உருவான இந்த பிரச்சனையால் அதிருப்தியடைந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போதுதான் தாம் ராஜினாமா செய்யத் தயார் என்றும் மோடி மிரட்டல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றம் அல்லது தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற நிகழ்ச்சிகளை இந்துத்துவா அமைப்புகள் குறைத்துக் கொண்டன.
அத்துடன் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமாக இருந்த ராஜேஷ்வரை ஜக்ரன் சமிதி பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டது ஆர்.எஸ்.எஸ். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜேஷ்வர் சிங், பல்வேறு தரப்பில் இருந்து எனக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. இதனால் என் உடல்நிலை பாதிப்படைந்தது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் விடுப்பு கேடிருந்தேன். 3 மாதம் விடுப்பு கொடுத்துள்ளனர் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யாவோ, ராஜேஷ்வர்சிங்கை நீக்கியது உத்தரப்பிரதேச கிளைதான். எங்களைப் பொறுத்தவரை யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை. அனைத்து இந்துத்துவா அமைப்புகளுடனும் நல்லுறவுடனேயே இருந்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.