வெடித்தது சர்ச்சை.. மும்பையில், பஞ்சாப் பிரிவினைவாதியுடன் போட்டோ எடுத்த கனடா பிரதமர் மனைவி!
Recommended Video
மும்பை: இந்தியா வந்துள்ள கனடா பிரதமரின் மனைவி சோஃபி, தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாத முன்னாள் உறுப்பினர் ஒருவருடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் இந்தியா வந்தது முதலே மத்திய அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்.
இதற்கு காரணம், தனி சீக்கிய நாடு கேட்டு போராடும் குழுக்களுக்கு கனடா பிரதமர் ஆதரவு அளிப்பதுதான் என்று கூறப்படுகிறது.
காரணம் இதுதான்
கடந்த சில ஆண்டுகளாக சீக்கிய பிரிவினைவாத குழுக்களுடன் ஜஸ்டின் ட்ரூடோ இணக்கமாக இருப்பது சில நிகழ்வுகளின் மூலம் வெளிப்பட்டது. இதுதான் மத்திய அரசின் புறக்கணிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
போட்டோ
இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சீக்கிய அமைப்பின் உறுப்பினராக இருந்த ஜஸ்பால் அத்வாலுடன் கனடா பிரதமர் மனைவி சோஃபி போட்டோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலை முயற்சி
ஜஸ்பால், 1986 ம் ஆண்டு பஞ்சாப் அமைச்சர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர். தண்டனை குற்றவாளியாக இருந்த முன்னாள் பிரிவினைவாதியான இவர் கனடா பிரதமர் மனைவியுடன் போட்டோ எடுத்துள்ளது சர்ச்சைக்கு காரணாகியுள்ளது.
விருந்துக்கும் அழைப்பு
மும்பையில் பிப்ரவரி 20 ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சோஃபி, ஜஸ்பாலுடன் போட்டோ எடுத்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டினுடன் டெல்லியில் நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ள ஜஸ்பாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாதகவும், அவர் அதை தவிர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.