போலீஸுக்கும் மாவோயிஸ்டுக்கும் மோதல்.. அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் தங்கையை போலீஸ்கார அண்ணன் ஒருவர் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான முயற்சியில் அந்த மாநில போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுக்மா மாவட்டத்தின் பாலேங்டாங் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த 29-ஆம் தேதி காலை 7 மணிக்கு தேடுதல் வேட்டைக்கு சுக்மா காவல் நிலைய அதிகாரி ராமா சென்றார். அப்போது அவர் தலைமையிலான போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சண்டை நடந்தது.
துப்பாக்கிச் சூடு
மிகத் தீவிர சண்டைக்கு நடுவில் வெட்டி ராமாவும் அவரது தங்கை வெட்டி கன்னியும் நேருக்கு நேர் பார்த்து கொண்டனர். எனினும் இரு தரப்பும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு மாவோயிஸ்டுகள் பலியாகினர்.
மாவோயிஸ்டுகள்
இதையடுத்து தன் தங்கையை சுட மனமில்லாமல் ராமா திரும்பிச் சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாவோயிஸ்டுகளின் பக்கம் இருந்த என் தங்கையை சுடுவதற்கு எனக்கு மனமில்லை. இதை நினைத்துக் கொண்டிருந்த போது என் தங்கையுடன் இருந்த மாவோயிஸ்டுகள் என்னை நோக்கி சுடத் தொடங்கினர்.
தங்கை
இதனால் நானும் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினேன். பின்னர் என் தங்கையும் பதிலுக்கு சுடத் தொடங்கிவிட்டு சிறிது நேரத்தில் அடர்ந்த காட்டில் சென்று மறைந்தார். நானும் அவரும் 1990-ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தோம். பின்னர் ஏற்பட்ட மனமாற்றத்தால் நான் கடந்த 2018-ஆம் ஆண்டு போலீஸில் சரணடைந்தேன்.
தங்கைக்கு கடிதம்
இதையடுத்து சில மாதங்களில் எனக்கு போலீஸ் வேலை கிடைத்தது. காவலராக பதவி உயர்வு பெற்றேன். என் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். என் தங்கையையும் அங்கிருந்து வந்துவிடுமாறு கடிதம் எழுதி வருகிறேன். ஆனால் அவர் இன்னும் வரவில்லை என்றார்.