இப்படியா 16 வயசு பொண்ணுக்கிட்ட நடந்துகிறது.. வீடியோ வெளியிட்டு போலீசை கிழித்த பிரியங்கா காந்தி
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பாலியல் துன்புறத்தல் புகார் அளிக்க வந்த 16 வயது பெண்ணுக்கு எதிராக தலைமை காவலர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டும் காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி இப்படியா ஒரு பெண்ணிடம் போலீஸ் நடந்து கொள்வது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் தார் பாபு என்பவர் தலைமைக்காவலராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் அண்மையில் காவல்நிலையம் சென்ற 16 வயது பெண், தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தலைமைக்காவலர் தாரா பாபுவிடம் புகார் அளித்துள்ளார். அப்போது தார் பாபு, அந்த 16 வயது பெண்ணை மிக மோசமாக பேசியுள்ளார்.
இந்த அலங்காரம் தேவையா
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்நிலையத்தில் மொபைலில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் தலைமைக் காவலர் தாரா பாபு ஒரு சேரில் அமர்ந்து கொண்டு, அந்த பெண்ணிடம் ஏன் மோதிரம் அணிகிறாய், ஏன் கழுத்தில் செயின் போட்டுள்ளாய். ஏன் இத்தனை அலங்கார நகைகள், இதை அணிவதால் உனக்கு என்ன நன்மை, இப்படியெல்லாம் அணியலாமா என்ற ரீதியில் கேட்டு திட்டுகிறார்.
வீட்டுக்கு வருவதில்லையா
அப்போது கூலி வேலை செய்யும் பெண்ணின் பெற்றோர் காவலரிடம் பேச முயல்கிறார்கள். ஆனால் அவர்களை பேச விடாமல் தடுக்கும் தார் பாபு, உங்கள் பொண்ணு வீட்டில் என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியலையா? நீங்கள் வேலைக்கு போகிறீர்கள் என சொல்கிறீர்கள், வீட்டுக்கே வருவதில்லையா? என மிரட்டும் தொணியில் பேசுகிறார். அதற்கு பிறகு காவல் நிலையத்தில் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்கிறார்கள்.
|
பலரும் கண்டனம்
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் தலைமைக் காவலர் தார் பாபுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, 16 வயது பெண்ணிடம் இப்படியா பேசுவது என அந்த காவலருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள்
இது தொடர்பாக வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிரிங்கா காந்தி அந்த வீடியோவுக்கு கீழ், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க வந்த பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது. ஒரு புறம் உத்தரப்பிரதேசத்தில் குற்றங்கள் குறைவாக இருப்பதாக காட்டுகிறார்கள். மறுபுறம் புகார் அளிக்க வந்தவர்கள் மீது சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள்" என இந்தியில் டுவிட் செய்துள்ளார்.
உபி போலீஸ் பதில்
பிரியங்கா காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிறகு நடவடிக்கையில் இறங்கியுள்ள உத்தரப்பிரதேச போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தலைமைக்காவலர் தார் பாபுவிடம் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தேவைப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.