ஏடிஎம் வரிசையில் நின்ற முன்னாள் ராணுவ வீரரை அறைந்த போலீஸ்காரர்.. வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்
பாகல்காட்: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 55வயதுடைய முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 55வயதுடைய நந்தப்பா என்ற முன்னாள் ராணுவ வீரரை 35-வயதுடைய காவலர் தேவராஜ் என்பவர் வியாழக்கிழமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் நந்தப்பாவை தாக்கிய காவலர் தேவராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
ரூபாய் நோட்டுகளான 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாகல்கோட் சிண்டிகேட் வங்கி ஏடிஎம் இல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது கூட்டத்தைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தேவராஜ் ஈடுபட்டார்.
கூட்ட நெரிசல் காரணமாக பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அங்கு நின்ற மக்களை வரிசையில் நின்று பணம் எடுக்குமாறு மிகவும் கோபத்துடன் அறிவுறுத்தினார். அந்த நேரத்தில் முன்னாள் ராணுவ வீரரான நந்தப்பாவும் பணம் எடுக்கு வங்கி ஏடிஎம்க்கு வந்துள்ளார்.
அந்த நிலையில் கூட்ட நெறிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் வரிசையில் நின்றவர்களை காவலர் தேவராஜ் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு நின்றிருந்த மக்களுக்கும் காவலர் தேவராஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த காவலர் தேவராஜ் அங்கு நின்றிருந்த நந்தப்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை படம்பிடித்த நபர்கள் சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. எனவே, காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய காவலர் தேவராஜை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான விசாரணை நடத்தி வருகின்றனர்.