சஹாரா தலைவர் சுப்ரதா வீடு முன்பு போலீஸ் குவிப்பு- எந்த நேரத்திலும் கைது
2012ம் ஆண்டு ஆகஸ்டு 31ந் தேதி, முதலீட்டாளர்களிடம் முறைகேடாக வசூலித்த பணத்தை திருப்பித்தராத சஹாரா நிறுவனத்தின் சொத்துக்களை செபி பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீடித்து வந்தது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையுமே சஹாரா நிறுவனம் மதிக்கவில்லை, நிறைவேற்றவில்லை. இதையடுத்து சஹாராவின் சொத்துக்களை செபி விற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட, சஹாரா நிறுவனத் தலைவர் மற்றும் மூன்று இயக்குனர்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
ஏற்கெனவே நவம்பர் மாதம் 21ந் தேதி சஹாரா நிறுவனத் தலைவர் ராய் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த உச்சநீதிமன்றம், மார்ச் 4-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்ரதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி தான் நேரில் கண்டிப்பாக ஆஜராவதாகவும் சுப்ரதா அதில் உறுதியளித்து்ளார்.
இந்த நிலையில், தற்போது போலீஸார் சுப்ரதாவைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவரது வீட்டுக்குப் போலீஸார் விரைந்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் கைதாகக் கூடும் என்று தெரிகிறது.