ஆம்புலன்சை மறித்தால் ரூ. 2000 அபராதம் - டெல்லி போலீஸ் அதிரடி!
டெல்லி: ஆம்புலன்சை மறித்தாலோ அல்லது பாதை விடாமல் சென்றாலோ அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே ஆம்புலன்ஸ் வரும் போது அவற்றிற்கு வழி விட வேண்டும் என்பது மனிதாபிமான நடவடிக்கை. ஆனால், இயந்திர உலகில் அனைவருமே ரெக்கை இல்லாமல் சாலையில் பறந்து கொண்டிருக்கும் சூழலில் பெருநகரங்களில் இது சாத்தியப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக டெல்லி போலீஸ் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அபராதம்...
இதன்படி, ஆம்புலன்சை மறித்தாலோ அல்லது ஆம்புலன்ஸ் செல்வதற்கு பாதை விடாமல் சென்றாலோ அவர்களுக்கு ரூ.2000 க்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை...
அவ்வாறு வழிவிடாமல் செல்லும் வாகனங்களின் பதிவு எண், நேரம், நாள் மற்றும் அதற்கான ஆதாரங்களை மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என டெல்லி சிறப்பு கமிஷ்னர் முக்தேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கை...
இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆம்புலன்ஸ் பிரசவங்கள்...
கடந்தாண்டு மே முதல் டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவ்வாறு போக்குவரத்தில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்சில் 26 பெண்களுக்கு பிரசவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதாபிமானத்தைக் கூட சட்டம் போட்டு தான் பெற வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் வேதனையாகத் தான் உள்ளது.