சபரிமலையில் 17 பேருக்கு கொரோனா உறுதி - சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடு
சபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
சபரிமலை: 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட மதவழிபாட்டு தலங்கள், தளர்வுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டன.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்த தேவசம் போர்டு, மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும் ஜனவரி 14ஆம் தேதியன்று 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது.
சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- மோடியிடம் திமுக வலியுறுத்தல்
இத்தகைய கட்டுப்பாடுகளால் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே, தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்தது.
இது தொடர்பாக, பக்தர்கள் மற்றும் தேவசம்போர்டு தலைவரின் கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு, தினமும் கூடுதலாக 1000பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அறிவிப்பு வெளியிட்டது. வார நாட்களில் 2000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். புதிய அறிவிப்பின்படி கூடுதல் பக்தர்கள் நேற்று முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் சபரிமலையில் 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.