இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் இப்போது இந்த அச்சம்தான்.. கோபிந்தா நிலை ஒரு உதாரணம்!
கொல்கத்தா: கொரோனாவை கூட வென்றுவிடலாம்.. ஆனால், அது சார்ந்த அச்சத்தை? இப்படியான ஒரு மோசமான நிலையில்தான், வட கிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த ஒரு இளம் நபரும் சிக்கிக்கொண்டுள்ளார்.
அவரது மனைவியே, அவரை வீட்டுக்குள் விடாமல், கதவை சாத்தியுள்ளார். குடியிருப்புவாசிகளும், மொத்தமாக குவிந்து, இவரை விரட்டியுள்ளனர். இத்தனைக்கும், அவருக்கு கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் என வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
"என் மனைவி, என் குழந்தையே என்னை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும்போது நான் என்ன சொல்ல முடியும், " என்று ஒரு கோபத்தோடு நிருபர்களிடம் கேட்டார், திரிபுரா மாநில தலைநகர் அகர்த்தலாவை சேர்ந்த அந்த பாவப்பட்ட இளைஞர் கோபிந்தா தேப்நாத் (37).
கோபிந்தா தேப்நாத்துக்கு மார்ச் மாதம் முதல், நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிம்மதியாக, தனது மனைவி மாம்பி தேப்நாத், சிறு வயது மகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன் அகர்த்தலாவிலுள்ள ஒரு சிறிய பிளாட்டில் வசித்து வந்தார். மாமியார் பானு தாஸுக்கு, ஏழைகளுக்கான அரசு வீட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பிளாட் இதுவாகும். அதுவரை எல்லாம் நல்லாத்தான் போனது.
ஒரே நாளில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா உறுதி.. சென்னையில் அதிர்ச்சி
ஆனால், மார்ச் மாதத்தில், நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, கோபிந்தா அசாம் மாநிலம், சிலாபாதரில் உள்ள தனது மைத்துனரைப் பார்க்கச் சென்றார். மாமனாரும் அவருடன் சென்றார். ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், இருவரும், அசாமிலேயே சிக்கிக் கொண்டனர்.
லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்படும்வரை, காத்திருந்த அவர், பொறுமை இழந்து போய் திரிபுராவுக்கு திரும்ப ஒரு காரை வாடகைக்கு எடுக்க முடிவு செய்தார். வாகன போக்குவரத்துக்கு நடைமுறையின்படி, தேப்நாத்துக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. திரிபுரா-அசாம் மாநிலங்களுக்கு இடையேயான முதல் சோதனைச் சாவடி, சுரைபரிக்கு அருகிலுள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டார். சோதனை முடிவுகளில், தேப்நாத்துக்கு, நெகட்டிவ் என வந்திருந்தது.
எனவே, அவரது குடியிருப்பு வளாகத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். மனைவி, குழந்தையை பார்க்க ஆசையோடு சென்ற தேப்நாத்துக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீட்டுக்குள் வரக்கூடாது என குடியிருப்பு வாசிகளும், அவர் மனைவி, குழந்தையும் சொல்லிவிட்டனர். வாசலோடு திருப்பியனுப்பப்பட்டார் தேப்நாத்.
இதுபற்றி தேப்நாத் கூறுகையில், "குடியிருப்புவாசிகள், எனது மனைவிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். என் மனைவி பயந்ததாக நான் உணர்கிறேன், எங்கள் குழந்தை அழுகிறாள். என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை, "என்று தெரிவித்தார்.
ஆனால், தேப்நாத் மனைவியோ, நான் அசாமிலேயே அவரை இருக்க சொன்னேன். அவசரப்பட்டு யார் வரச் சொன்னது என கேட்கிறார். மேலும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும், 14 நாள் தனிமைப்படுத்துதல் போதாது. கொரோனா வைரஸ், மேலும் சில நாள் கழித்து பாதித்தால், எனது வயது முதிர்ந்த தாய் மற்றும் சிறு வயது குழந்தைகள் உடல்நிலையை பாதித்துவிடுமோ என அச்சப்படுகிறேன் என்கிறார் அவர். டாக்சிக்கு ரூ.30,000 செலவிட்டு வீடு திரும்பியும், வாசலுக்குள் போக முடியாத நிலைமை தேப்நாத்துக்கு.
இதுதான் இப்போது நாடு முழுக்க உள்ள நிலை. மதுபான கடை முதல் டீக்கடை வரை திறந்தாச்சு. அங்கு செல்லும் இளைஞர்கள் நோய் தொற்றுடன் வீட்டுக்கு சென்று, முதியவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு குடும்ப பெண்ணுமே, திரிபுராவின், மாம்பியை போலத்தான், அச்சத்தோடு வாழும் நிலையில் உள்ளனர்.