கொரோனா- இத்தாலியில் தொடரும் பயங்கரம்- ஒரே நாளில் 743 பேர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820
ரோம்: கொரோனாவால் இத்தாலியில் ஒவ்வொருநாளும் பல நூறு பேர் மாண்டு வருகின்ற பெருந்துயரமும் தொடருகிறது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம் தொடங்கிய சீனா தற்போது அதில் இருந்து விடுபட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் உலகம் இதனை முழுவதுமாக நம்பவும் இல்லை.
ஏனெனில் கொரோனாவின் தாக்கம் உலகையே நிர்மூலமாக்கி வருகிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.. பிரதமர்
இத்தாலி சோகம்
இத்தாலியில் ஒவ்வொருநாளும் கொரோனாவால் பல நூறு பேர் பலியாகி வருகின்றனர். இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6820 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா- ஸ்பெயின் நிலவரம்
இதேபோல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000. ஸ்பெயினில் மேலும் 6,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,673. ஸ்பெயினில் 2,700 பேரை கொரோனா பலி கொண்டிருக்கிறது.
பிரான்ஸில் 240 பேர் பலி
பிரான்ஸில் கொரோனா மேலும் 240 பேரின் உயிரை குடித்திருக்கிறது. பிரான்ஸில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கொரோனாவால் ஒரேநாளில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15, மலேசியாவில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,624.
இலங்கையில் 100பேர் பாதிப்பு
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. இதனிடையே சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவரால்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.