கொரோனாவால் எத்தனை விபரீதங்களோ? கொல்கத்தாவில் இனப்பாகுபாட்டுக்குள்ளாகும் டார்ஜிலிங் மாணவர்கள்!
கொல்கத்தா: கொரோனா வைரஸ் தாக்கம் கொல்கத்தாவில் வேறு ஒருவகையான விபரீதத்தை உருவாக்கி உள்ளது. டார்ஜிலிங் மாணவர்களின் முகம் சீனர்களைப் போல இருப்பதால் கொல்கத்தா வீதிகளில் கொரோனாவைரஸ் என்ற கேலிகளுடன் அவர்கள் இனப்பாகுபாட்டுக்குள்ளாகிற கொடுமையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
Recommended Video
கொல்கத்தாவின் ஏஜி போஸ் சாலையில் சனிக்கிழமையன்று பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் டார்ஜிலிங், சிலிகுரியை சேர்ந்தவர்கள். அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த நபர் திடீரென இந்த மாணவர்களைப் பார்த்து கொரோனா வைரஸ் என்று கூச்சலிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த நபருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனர். இதற்கு காரணமே கொரோனாவால் பெரும் உயிரிழப்புகளை எதிர்கொண்ட சீனர்களின் முகச்சாயலுடன் டார்ஜிலிங்- சிலிகுரி மாணவர்களின் முகச்சாயல் ஒத்திருப்பதுதான். மங்கோலிய இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரே முக அமைப்பு உடையவர்கள்.
இதேபோல் சோனார்பூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த டார்ஜிலிங்-சிலிகுரியை சேர்ந்த ஒரு மாணவர் இனக்கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் மங்கோலிய இனக்குழுவின் முக அமைப்பு கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டின், மேற்கு வங்கத்தின் குடிமக்கள்தான். இது பற்றி பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் அச்சமடைந்தனர் என்றனர்.
மலேசியாவில் கொரோனா தாக்குதலுக்கு முதல் முறையாக 2 பேர் பலி- 673 பேருக்கு பாதிப்பு
கொல்கத்தாவின் லேக் கார்டன் பகுதியில் தங்கியிருந்த டார்ஜிலிங்கை செர்ந்த ஜதாவ்பூர் பல்கலைக் கழக மாணவரும் இதேபோன்ற துயரத்தை எதிர்கொண்டிருக்கிறார். இது குறித்து அந்த மாணவர் கூறுகையில், ஆட்டோவுக்காக காத்திருந்த போது திருநங்கைகள் கூட்டம் ஒன்று முகத்தை மறைத்துக் கொண்டு கொரோனா வைரஸ்! கொரோனாவைரஸ் என என்னைப் பார்த்து கூச்சலிட்டனர். அப்போது தெருவில் இருந்த யாரும் எனக்கு உதவவும் முன்வரவில்லை. கொரோனா, சீனாவில் இருந்து பரவியதால் எங்களை கண்டு அப்படி அச்சப்படுகின்றனர்- கேலி செய்கின்றனர் என்றார்.
இப்படி கொல்கத்தாவில் வெவ்வேறு வடிவங்களில் டார்ஜிலிங் பகுதி மாணவர்கள் கொரோனாவால் இனப்பாகுபாட்டுக்குள்ளாகிற அவலம் தொடர்கிறது.